ஒன்றிய அரசே..!! மாநில அரசே..!!
மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் மாசுபடுத்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தும் மக்கள் விரோத திட்டங்கள் தேவைதானா?


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சுமார் ரூ.9,250 கோடி மதிப்பீட்டில் 1301மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் நிலக்கரி இறங்குதளம் கடலுக்குள் அமைக்கப்பட்டு, அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக வேண்டி, இப்பகுதி கடலில் சுமார் 7.91 கி.மீ அளவில் அதற்கான பாலங்கள், கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளது.
இதனால் உடன்குடி, திருச்செந்தூர் வட்டார கடற்கரை கிராமங்களில் பெரும் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியிலுள்ள கடல் சீற்றம் கொண்டுள்ளது.
கடல் சீற்றத்தை குறைப்பதற்காக சில தூண்டில் பாலங்கள் அமைக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை என்று அப்பகுதி மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக திருச்செந்தூர் அமலிநகர் மீனவர் கிராமத்தில் தொடரும் மண் அரிப்பினால் கடற்கரை மணற்பகுதிகள் கடலுக்குள் சென்றதில், அப்பகுதி மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை கடல்கரையில் நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு உரிய பரிகாரம் கோரி ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திட மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றமும், மண் அரிப்பும் தொடரும் பட்சத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் வரை அதன் பாதிப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இப்பிரச்சனை குறித்து கலந்தாலோசனை செய்வதற்கு அமலிநகர் ஊர் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை இன்று (திச 4) நேரில் அழைத்து நிலைமைகளை விளக்கிக் கூறினர்.
விசிக தூத்துக்குடி மாவட்ட, மண்டல, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டதில், அரசின் மெத்தனப் போக்கைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தோம்.
அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியுள்ளதை அறிந்தோம்.
பொதுமக்களின் கருத்துக்களை அலட்சியம் செய்துவிட்டு, மின் நிலையத்தின் கட்டுமான பணிகள் சுமார் 4,500 ஊழியர்களுடன், வேகமாக நடைபெறுகிறது. தற்போது, பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர் உட்பட முக்கிய உபகரணங்களில், 90 சதவீதம் வந்து விட்டன. டர்பைன், ஜெனரேட்டர் நிறுவும் பணி நடப்பதாகத் தகவல்.
குறிப்பாக இப்பகுதியில் ஒரே நேரத்தில் தலா, 80,000 டன் நிலக்கரி உள்ள, இரு கப்பல்கள் நிற்கும் வகையில், உடன்குடி நிலக்கரி முனையம் அமைக்கப்பட்டுள்ளதாம்..!
கப்பலில் உள்ள நிலக்கரியை எடுத்து, 1 மணி நேரத்திற்கு, 2,000 டன் நிலக்கரியை, கன்வேயரில் அனுப்பும் திறனில், ‘ஷோர் அன்லோடர்’ இயந்திரம் நிறுவப்பட உள்ளதாம்..!!
இதற்காக பி.எச்.இ.எல்., நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியின் மதிப்பு, 7,848 கோடி ரூபாய். இதுவரை, 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மொத்த நிதியில், 65 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி முனையம் அமைக்கும், ஐ.டி.டி.சி., நிறுவனத்தின் ஒப்பந்த மதிப்பு, 1,902 கோடி ரூபாய். இதுவரை, 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், 80 சதவீத நிதி செலவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழைய நிலக்கரி அனல்மின் நிலையங்கள் கடந்த பல ஆண்டுகளாக மொத்த உற்பத்தித் திறனிலிருந்து 60 விழுக்காட்டிற்கும் குறைவான உற்பத்தித் திறனிலேயே இயங்கி வருகின்றன. இதனால் ஒரு அலகு மின்சாரம் உற்பத்திக்கான செலவு மிகவும் அதிகமாகி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதோடு, காற்று மாசுபடுவதும் அதிகமாகி சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது, துறை சார்ந்த அனுபவமிக்க வல்லுனர்களின் ஆலோசனையோடு, பொதுமக்களுடைய கருத்துக்களையும் கேட்டறிவதுதான் அரசின் கடமை. மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் மாசுபடுத்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தும் இது போன்ற திட்டங்கள் தேவைதானா? என்றே எண்ணத் தோன்றுகிறது.
எழுச்சித் தமிழர் தலைவர் திருமா அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் கண்டறிந்து, இப்பகுதியிலுள்ள மீனவ கிராமங்களை மண் அரிப்பிலிருந்து தடுக்கும் நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்நின்று செயல்படுத்தும் என்று மீனவ மக்களுக்கு உறுதி அளித்துவிட்டு வந்தோம்.
இவண்
காயல் அகமது சாகிபு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி